Australian Consulate-General
Chennai, India

Media Releases in Tamil

                                  

                   பிப்ரவரி 9, 2016                                                                                                    PA-CN/16/04         

 

ஆஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியாக அமலில் உள்ளன

 

ஆஸ்திரேலியாவின் பிராந்திய செயல்முறை மையங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொண்ட சவாலுக்கு ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பினைத் தொடர்ந்து,  அந்நாட்டின் குடி நுழைவு மற்றும் எல்லை பாதுகாப்புத் துறையின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு பீட்டர் டட்டன் அவர்கள், ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.

 

சட்டவிரோதமாக பிறநாட்டு மக்கள் ஆஸ்திரேலியாவினுள் நுழைவதை தடுக்கவும், ஆஸ்திரேலிய எல்லைகளின் அரசுரிமையை உறுதிப்படுத்தவும், ஆஸ்திரேலிய அரசு கடுமையான எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை முழு மூச்சில் அமல்படுத்தி வருகிறது.

 

ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, பிராந்திய செயல்முறை தொடர்ந்து நீடிப்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது எல்லை அரசுரிமை இயங்குமுறை கொள்கையின் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.

 

சட்டவிரோதமாக மக்கள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்வதிலும், அவ்வாறு நுழையும் மக்கள் கடலில்  தம் வாழ்வை பணயம் வைப்பதைத் தடுப்பதிலும், ஆஸ்திரேலியா மேற்கொண்ட பொறுப்பில் திடமாக இருப்பதாக குடி நுழைவு மற்றும் எல்லை பாதுகாப்புத் துறையின் அமைச்சரான பீட்டர் டட்டன் கூறினார்.

 

“கடந்த இரண்டு வருடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட படகுகளை, தன் கடல் பரப்புகளிலிருந்து ஆஸ்திரேலியா அப்புறப்படுத்தி உள்ளது. கள்ளப் படகுகளில் புறப்படும் மக்களை, அவரவர் புறப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் கோட்பாடு தொடரும்,” என்று திரு டட்டன் கூறினார்.

 

“பிராந்திய செயல்முறையை தொடர்ந்து செயல்படுத்துவதிலும் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. இது, கடல் பரப்பில் எடுக்கப்பட்டுள்ள விரிவான நடவடிக்கைகளுக்கு அப்பால், ஆஸ்திரேலியாவிற்கு படகுகளின் மூலம் சட்டவிரோதமாக பயணிக்க முற்படும் மக்களை தடுக்கும் சாதனமாகவும் அமையும்.

 

“நான் தெரிவிக்க விரும்பும் செய்தி என்னவென்றால், கள்ள படகுகளில் ஏறி, ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பயணிக்கும் மக்கள் இரண்டு விளைவுகளையே சந்திக்க நேரும்: வழிமரித்து தடுக்கப்பட்டு ஆஸ்திரேலிய கடல்களில் இருந்து திருப்பி அனுப்பப்படுவர்; அல்லது தக்க செயல்முறைகளைப் பூர்த்தி செய்ய வேறொரு நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

 

“சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் மக்களை ஆஸ்திரேலிய செயல்முறையை உபயோகித்து முறைப்படுத்துவதோ, அவர்களை மறுகுடியேற்றம் செய்வதோ என்றுமே சாத்தியம் இல்லை. இதில் எந்த  விதிவிலக்கும் இல்லை. இவ்விதிகளுக்கு எல்லோரும் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும்.”

 

ஆள் கடத்தல்காரர்களின் உதவியுடன், ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறைகளை பயன் படுத்தி நுழைய முற்படுவர்கள், தம் வாழ்க்கையை மட்டுமின்றி தமது குடும்பத்தினரின் வாழ்க்கையையும் – ஏன், சகலத்தையும் இழக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

         

 

 

 

             ஜனவரி 20, 2016                                                                                                             PA-CN/16/02

 

ஒரு மனிதனின் பெருமுயற்சி – இந்தியாவின் இரு முனைகளுக்கு இடையே  - 60 நாட்கள், 4600 கி.மீ.

ஆஸ்திரேலிய நெடுந்தொலை ஓட்டக்காரர் பேட் ஃபார்மர் (Pat Farmer) என்பவரின் இந்தியாவின் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை ஓடும் பெரும் பிரயத்தனம்

 

புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நெடுந்தொலை ஓட்டக்காரரும் முன்னாள் (ஆஸ்திரேலிய) பாராளுமன்ற உறுப்பினருமான பாட் ஃஃபார்மர் மேற்கொண்டுள்ள அடுத்த ஓட்ட சவால் ‘இந்தியாவின் ஆன்மாவினை பறைசாற்றும் ஓட்டம்’ (Spirit of India Run). இந்த ஓட்டத்தை இவர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 26, 2016 அன்று தொடங்குவார். தொலைதூர மற்றும் நீண்டநேர ஓட்டங்களில் உலக சாதனைகளைப் படைத்த ஃபார்மர், இந்தியாவின் தென் முனையில் இருந்து வட முனை வரை 4600 கி.மீ ஓடி, பத்து மாநிலங்களை, 60 நாட்களில்  கடக்க உள்ளார்.

 

முன்பு கேப் காமரின் என்று அழைக்கப்பட்ட கன்னியாகுமரி, இந்திய தலைநில பரப்பின் தென்கோடியில், அரபிக்கடலும் வங்கக்கடலும் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது.  ஃபார்மர் இந்த ஓட்டத்தை தொடங்கப்போகும் நாளான ஜனவரி 26, 2016, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும் – இந்நாள், இந்தியாவின் குடியரசு தினம், மற்றும் ஆஸ்திரேலிய தினம்.

 

“ ‘இந்தியாவின் ஆன்மாவினை பறைசாற்றும் ஓட்டம்’, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு இடையே உள்ள உறவினை மேம்படுத்தும் முயற்சியாகும்,” என்று தென்னிந்தியாவின் ஆஸ்திரேலிய தூதரகத் தலைவரான திரு. ஸீன் கெல்லி குறிப்பிட்டார். “நீண்டநேர ஓட்டங்களில் தாக்குப்பிடிக்கும் திறமை வாய்ந்த ஒரு ஆஸ்திரேலிய குடிமகனின் இந்த ஓட்டம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” என்றும் திரு. ஸீன் கெல்லி கூறினார்.

 

கன்னியாகுமரியில் தொடங்கி, இந்தியாவின் மேற்கு கரையோரமாக கேரள மாநிலத்தின் கொச்சி மற்றும் காஸர்கோடு நகரங்களை கடந்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் பகுதி வழியாக கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை ஃபார்மர் வந்தடைவார். வழி நெடுக ஃபார்மருடன் பயணம் செய்யும் படப்பிடிப்புக் குழு, அவரின் ஓட்டத்தை பதிவு செய்யும். “இதன் மூலம், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையினை ஆஸ்திரேலிய மக்களும் உலகளாவிய மக்களும் அறியும் வண்ணம் செய்ய இயலும்,” என்று திரு ஸீன் கெல்லி கருத்து தெரிவித்தார்.

 

இந்த ஓட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையே அன்புடைமை, நட்பு மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பது ஃபார்மர் அவர்களின் நோக்கமாகும். மேலும், மகிந்திரா நிறுவனத்தின் ‘நன்ஹி கலி’ தொடக்க முயற்சியை  முதன்மைப் படுத்துவதன் மூலம் இந்தியாவில் பெண்கல்வித் திட்டங்களுக்காக நிதி திரட்ட உதவுவதும்  ஃபார்மரின் இலக்காகும்.

 

“இந்தியாவின் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை ஓடுவது எனக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது! இவ்வளவு பன்முனைத்தன்மையும் ஆழமான கலாச்சார பெருமையும் கொண்ட ஒரு நாட்டில் நான் இதுவரை ஓடியது கிடையாது” என்றார் பேட் ஃபார்மர். “என் ஓட்டங்களிலேயே இது தான் தலைசிறந்ததாக அமையும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை,” என்றும் கூறினார்.

 

பெண்கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் போது, “இன்றைய இளம் பெண்கள் தான் அடுத்த தலைமுறையின் தாய்மார்கள்” என்றார் திரு. பேட் ஃபார்மர். “பெண்கள் தான் தம் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். ஆகையால், ஒவ்வொரு பெண்ணும் அடிப்படை கல்வி பெறும் வாய்ப்பைப் பெற வேண்டும். கல்வி ஒன்று தான் அவர்களின் வாழ்வையும் உலகத்தின் தரத்தையும் மாற்றும் திறன் படைத்தது.”

 

உபயத்தார் ஆகிய அதானியும், பெண்கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் ஃபார்மருடன் கரம் கோர்ப்பதில் தாம் பெருமை அடைவதாகக் கூறினார்.

 

“அதானி நிறுவனம் தன் இலவச கல்வி திட்டங்கள் மற்றும் ஏனைய முயற்சிகளின் மூலம் கல்வி தரத்தை உயர்த்தி, பெண் குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயிலும் விகிதத்தை அதிகரிக்கும் பணியில் உறுதியாக உள்ளது. இது மட்டும் அல்லாமல், பேட் ஃபார்மர் மற்றும் அதானி நிறுவனத்தின் இந்த கூட்டணி, இந்தியாவின் பன்முகத்தன்மையை அனைவரும் அறியும் வண்ணம் கோடிட்டுக் காட்டுவதன் மூலம், கலாச்சார ரீதியில் இரு நாடுகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது,” என்று ஆஸ்திரேலியாவில் உள்ள அதானி துறைமுகத்தின் தலைவரான கேப்டன் சந்தீப் மேத்தா உரைத்தார்.

 

மகிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, திரு. ஃபார்மர் அவர்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பதில் தம் நிறுவனம் பெரு மகிழ்ச்சி அடைவதாக பெருமிதம் கொண்டார்.

 

“மகிந்திரா நிறுவனம் தன் ‘நன்ஹி கலி’ தொடக்க முயற்சியின் வாயிலாக இந்தியா முழுவதும் 100,000 பெண்களுக்கு கல்வி பயில்வித்து, பெண்கல்வி இயக்கத்தை திண்ணமாக ஆதரிக்கிறது. திரு. பேட் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இந்த ஓட்டம், ஏற்கனவே வலுவாக உள்ள இந்திய-ஆஸ்திரேலிய உறவை மேலும் பலப்படுத்தும்,” என்று திரு. மகிந்திரா கூறினார்.

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு. ஃபார்மர், 2004 ஆம் ஆண்டில் இருந்து 2007 வரை கல்வி, விஞ்ஞானம் மற்றும் பயிற்சி துறைகளின் பாராளுமன்ற செயலராகவும் பணியாற்றி உள்ளார். 2011 – 12 ஆண்டுகளில் வட துருவத்தில் இருந்து தென் துருவம் வரை ஓடி, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தூய-நீர் திட்டங்களுக்காக 100,000 ஆஸ்திரேலிய டாலருக்கு மேல் நிதி திரட்டினார். 2014 ஆம் ஆண்டில், மத்திய கிழக்கு நாடுகளில், இரண்டு வாரங்களில் 1300 கிலோமீட்டருக்கு மேல் ஓடி, நிதி திரட்டியதோடு, அப்பகுதியில் அமைதி நிலவுவதற்கான விழிப்புணர்வையும் உண்டாக்கினார்.     

 

 

 

28 October 2015                                          PA-CN/10/03

ஆஸ்திரேலியாவின் உலக இசைக் கருவியாளர்களின் குழு சென்னையை புயலென ஆட்கொண்டது

ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் கலாச்சார பரிமாற்ற ஈடுபாட்டினை குறிக்கும் வகையில் இசை மேதை ஜுபின் மேத்தா அவர்களின் தலைமையில் சர்வ தேச புகழ் பெற்ற ஆஸ்திரேலிய உலக இசைக் கருவியாளர்களின் குழு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்ததை ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடு அமைச்சர் ஆண்ட்ரு ரோப் வரவேற்றார்.
திரு ரோப் "பெரும் புகழ் வாய்ந்த ஜுபின் மேத்தா அவர்களின் தலைமையில் ஆஸ்திரேலியாவின் உலக இசைக் கருவியாளர்கள் குழுவின் மிக நேர்த்தியான நிகழ்ச்சியை சென்னையில் நேரில் கேட்டு ரசித்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார். "முற்றிலும் உலகத் தரம் வாய்ந்த ஆஸ்திரேலியாவின் கலாச்சார ஆக்கப் பொருள்கள்களின் தரத்திற்கு ஆஸ்திரேலியாவின் இசைக் கருவியாளர்களின் குழு ஒரு எடுத்துக் காட்டாகும்" என்றும் அவர் கூறினார்.
“இது ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கலைகள் மற்றும் கலாசார பரிமாற்ற ஈடுபாட்டினை ஊக்குவிப்பதற்காக 2014ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் திட்டமிடப்பட்ட பல் வேறு கலாச்சார செயல்பாடுகளில் ஒன்றாகும்” என்றும் திரு ரோப் கூறினார்.
ஆஸ்திரேலிய உலக இசைக் கருவியாளர்களின் குழு 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்பொழுது, சுமார் பாதி இசைக் கருவியாளர்கள் அயல் நாடுகளில் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் பெர்லின், வியன்னா மற்றும் இஸ்ரேல் இசைக் கருவியாளர்கள் குழுக்கள், ஆம்ஸ்டர்டாம் ராயல் கான்செர்க்பூ மற்றும் சிகாகோ மற்றும் லண்டன் பல்லியல் இசைக் கருவியாளர்களின் குழு போன்ற உலகத்தின் சிறந்த இசைக் கருவியாளர்களின் குழுக்கள் சிலவற்றில் முதன்மைப் பொறுப்புகளில் இருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய இசைக் கருவியாளர்கள் குழுவுடன் 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தம் நிகழ்ச்சிகளை வழங்கிய சிறந்த இந்திய இசைக் குழு இயக்குனர் ஜுபின் மேத்தா, அக் குழுவினருக்கு இந்தியாவில் இசைச் சுற்றுப் பயணம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார். இந்த இசைச் சுற்றுப் பயணத்தைப் பற்றி இசை மேதை மேத்தா "ஆஸ்திரேலிய உலக இசைக் கருவியாளர்களின் குழுவை 2013ம் ஆண்டு சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இயக்கியது எனக்கு ஒரு மாபெரும் கலை அனுபவமாக இருந்தது. ஆகையினால், உலகத்தின் தலைச் சிறந்த குழுக்களில் ஒன்றாக நான் கருதும் இந்தக் குழுவை அக்டோபர் 2015ல் என் நாட்டிற்கு வருமாறு நான் மிகப் பெரும் மகிழ்ச்சியுடன்அழைப்பு விடுத்துள்ளேன்" என்று கூறினார்.

இசை மேதை மேத்தாவினால் இயக்கப்பட்டு சென்னையில் நடைப் பெற்ற இசை நிகழ்ச்சியில் மொசார்ட், ரோச்சினி மற்றும் ப்ராம்ஸ் போன்ற மேதைகளின் இசைகள் இடம் பெற்றன. ஆஸ்திரேலியாவின் உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வல்லுநர் சர் டொனல்ட் பிரட்மன் அவர்களின் பேத்தியும் உச்சக் குரலிசைப் பாடகியுமான கிரேடா பிரட்மன் அவர்களின் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
ஆஸ்திரேலியாவின் உலக இசைக் கருவியாளர்கள் குழுவின் சென்னை இசை நிகழ்ச்சிக்கு சென்னையின் பதினொன்று முன்னணி வர்த்தக நிறுவனங்கள் அடங்கிய குழுமம் ஒன்று ஆதரவாளர்களாக செயல் பட்டது. " சம காலத்தைச் சார்ந்ததும் துடிப்பானதும் மற்றும் பல் வகையுமான ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்கு சென்னையின் வர்த்தக சமூகம் அளித்த மகத்தான ஆதரவு பற்றி நான் மிகவும் நன்றி உடையவனாக உள்ளேன் " என்று திரு ரோப் கூறினார்.

 

 

28 October 2015                                           PA-CN/10/01
 

ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீடு துறை அமைச்சர் புதிய முயற்சி கூட்டாண்மைகளுக்கு நிறைய ஆற்றல் வளம் இருப்பதாக தெரிவித்தல்
 

சென்னையில் \'ஐ ஐ டி மதராஸ் ரிசர்ச் பார்க்\' க்கு வருகை தந்த ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடு அமைச்சர் ஆன்ட்ரு ரோப் அவர்கள் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய தொழில்களின் அபிவிருத்திக்கும் புது முயற்சிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தினார்.

புதிய முயற்சிகளை பொறுத்த மட்டில், ஆஸ்திரேலியாவிற்கு பெருமைக்குரிய இடம் உண்டு. நுண்ணிய ஒலி அலைகள் மூலம் படம் பிடிக்கும் கருவி (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்), விமானத்தின் போக்கை பதிவு செய்யும் கறுப்புப் பெட்டி, கோச்லியர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட உயிர் மின்னணுவியல் காது (கோச்லியர் பயோனிக் காது) மற்றும் கம்பி இல்லா வலைத்தள தொடர்பு (வைபை) போன்ற வாழ்கையின் போக்கையே மாற்றி அமைக்க வல்ல பற்பல தொழில் நுட்பங்கள் ஆஸ்திரேலியாவில்தான் தொடங்கப் பெற்றன.
புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் சூழ்நிலைகளை உருவாக்கும் தேவை பற்றியும் இதில் அரசாங்கம் வகிக்க வேண்டிய பொறுப்பைப் பற்றியும் திரு ரோப் முக்கியமாக குறிப்பிட்டார். மேலும், ஐ ஐ டி மதராஸ் ரிசர்ச் பார்க் போன்ற நிறுவனங்கள் புது முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு மிகவும் முக்கியம் என்பதையும் குறிப்பிட்டார்.

“ஐ ஐ டி மதராஸ் ரிசர்ச் பார்க்கில் நான் கண்ட அடைக்காக்கும் சாதனங்களில் தொழில் துறையின் சேர்க்கையின் மூலம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையை ஆராய்ச்சிக் கட்டத்திலிருந்து வணிகமயமாக்குதல் கட்டத்திற்கு எடுத்துச் செல்வது புதிய முயற்சிகளின் வெற்றிக்கு அடிப்படையாகும்” என்று திரு ரோப் மேலும் கூறினார்.
ஆஸ்திரேலிய -இந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இடையே இணைந்து செயலாற்றுதல் மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி திரு ரோப் பேசினார். " இந்தியாவிற்கு தேவையான உடல்நல பராமரிப்பு, மருத்துவம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற துறைகளில் ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் தங்களுடைய ஆராய்ச்சிப் பணிகளில் முன்னிலையில் இருக்கின்றன."
ஐ ஐ டி மதராஸ் மட்டுமே ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்களுடன் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உடையது. மெல்பர்ன் பல்கலை கழகத்துடன் இணைந்து 3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புடைய மெல்பர்ன் - இந்திய முதுகலை திட்டமும் இதில் அடக்கம். "ஐ ஐ டி மதராஸ் போன்ற இந்திய நிறுவனங்களுடன் எங்களுடைய தொடர்புகளை நாங்கள் மதிக்கிறோம். மேலும், எதிர் காலத்தில் இத்தகைய கூட்டாண்மைகள் ஏற்படுவதையும் விரும்புகிறோம்."
ஆஸ்திரேலிய - இந்திய மூலோபாய ஆராய்ச்சி நிதி (ஆஸ்திரேலிய-இந்திய ச்டிரடேஜிக் பண்டு ) அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) ஆகியத் துறைகளில் இணைந்து ஆராய்ச்சி செய்வதை வலியுறுத்துகிறது. இது ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஆராய்ச்சி கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பின் முக்கிய அங்கமாகும்.